ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தனியார் பேருந்தில் பெண் பயணியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிவிட்டுத் தப்பிக்க முயன்ற இரண்டு பெண்களை, அதே பேருந்தில் பயணம் செய்த காவலர் ஒருவர் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்துப் போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இருந்து கமுதி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில், வழிமறிச்சான் கிராமத்தைச் சேர்ந்த அன்னமயில் (55) என்ற பெண் பயணி ஏறியுள்ளார். பேருந்து கூட்டம் நிறைந்திருந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்ட ராமநாதபுரம் குயவன்குடி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி (35) மற்றும் செல்வி (38) ஆகிய இரு பெண்கள், செய்யாமங்களம் அருகே பேருந்து வந்தபோது திட்டமிட்டு அன்னமயிலின் கழுத்திலிருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை நைசாகத் திருடியுள்ளனர்.
தங்கள் திட்டம் நிறைவேறியவுடன், அடுத்த நிறுத்தமான விரதக்குளம் பேருந்து நிறுத்தத்தில் இருவரும் அவசர அவசரமாக இறங்கித் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்கள் இறங்கிய சில நிமிடங்களிலேயே தனது கழுத்திலிருந்த நகை திருடு போனதை உணர்ந்த அன்னமயில், பேருந்திற்குள் கூச்சலிட்டு அழுதுள்ளார். அப்போது அதே பேருந்தில் சீருடை இன்றிப் பயணம் செய்து கொண்டிருந்த முதுகுளத்தூர் காவல் நிலைய ஏட்டு முருகன் என்பவர், உடனடியாகச் சமயோசிதமாகச் செயல்பட்டார். பேருந்தை நிறுத்தச் சொன்ன அவர், கீழே இறங்கித் தப்பிச் செல்ல முயன்ற அந்த இரண்டு பெண்களையும் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தார். நகை திருடிவிட்டுத் தப்பிக்க வழியின்றிப் பதுங்கியிருந்த இருவரையும் மீட்ட ஏட்டு முருகன், உடனடியாக அபிராமம் போலீசாருக்குத் தகவல் அளித்து அவர்களிடம் ஒப்படைத்தார்.
அபிராமம் போலீசார் நடத்திய விசாரணையில், கைதான ஈஸ்வரி மற்றும் செல்வி ஆகிய இருவரும் திட்டமிட்டுப் பேருந்துகளில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் போலீசார் மீட்டனர். திருடப்பட்ட நகையைச் சில நிமிடங்களிலேயே மீட்டுக் கொடுத்ததோடு, குற்றவாளிகளையும் கையும் களவுமாகப் பிடித்த காவலர் முருகனின் வீரத்தையும், கடமை உணர்வையும் மாவட்டக் காவல்துறை உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். “கடமையின் மீது கொண்ட பற்று காரணமாகவே பேருந்தில் இருந்து இறங்கி ஓடிய திருடர்களை என்னால் பிடிக்க முடிந்தது” என ஏட்டு முருகன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.














