இசையமைப்பாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா, “Dude” திரைப்படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல் இரண்டு பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.
பாடல்களின் உரிமை மீறல் குறித்து இளையராஜா, சோனி மியூசிக் எண்டர்டெயின்மெண்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம், மற்றும் அமெரிக்காவின் ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
முந்தைய விசாரணையில், இளையராஜாவின் இசை பயன்பாட்டின் மூலம் சோனி நிறுவனம் பெற்ற வருவாய் விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இன்று நீதிபதி என். செந்தில்குமார் முன்னிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இளையராஜா தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன் ஆஜராகி, “சோனி நிறுவனம் இதுவரை எந்த பதிலும் தாக்கல் செய்யவில்லை; அதேசமயம் புதிய ‘Dude’ திரைப்படத்தில் என் இரண்டு பாடல்கள் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், சோனி நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், வருமான விவரங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார். மேலும், “இளையராஜாவின் 500-க்கும் மேற்பட்ட பாடல்களின் பதிப்புரிமை விவகாரம் குறித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்” என கூறினார்.
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, “சீலிட்ட கவரில் வருமான விவரங்களை தாக்கல் செய்யக்கூடாது” என உச்சநீதிமன்றம் முன்பு வழங்கிய உத்தரவைக் குறிப்பிட்டு, சோனி நிறுவனம் தாக்கல் செய்த ஆவணங்களை திருப்பி ஒப்படைத்தார்.
மேலும், ‘Dude’ திரைப்படம் தொடர்பாக தனியாக வழக்கு தொடரலாம் என இளையராஜாவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி, முக்கிய வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
 
			

















