மும்பை:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 45-வது லீக் ஆட்டம் இன்று மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு ரியான் ரிக்கல்டன் மற்றும் ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா 12 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் வந்த வில் ஜாக்ஸுடன் ரியான் ரிக்கல்டன் இணைந்து நல்ல கூட்டு ஆட்டம் நடத்தினார்.
ரியான் ரிக்கல்டன் 32 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் எடுத்தார். வில் ஜாக்ஸ் 29 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 28 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் நமன் திர்(25) மற்றும் கார்பின் போஷ்(20) மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்தது. லக்னோ பந்துவீச்சில் மயங்க் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 216 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் மார்க்ரம் சிறப்பாக ஆட முடியவில்லை. நிக்கோலஸ் பூரன் 27 ரன்கள் விளாசி எதிர்ப்பு அளித்தாலும், தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்ததால் லக்னோ தடுமாறியது.
பும்ரா அசத்தலாக பந்துவீசி 16-வது ஓவரில் டேவிட் மில்லர், அப்துல் சமத், ஆவேஷ் கான் ஆகிய மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி சிறந்த பந்துவீச்சாளராக விளங்கினார். தொடர்ந்து 5-வது வெற்றியை பெற்ற மும்பை, தற்போது 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.