சென்னை: “மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களை பங்கேற்க தடுக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் காவல்துறையை பயன்படுத்தினார்” என ஆளுநர் ஆர்.என். ரவி விடுத்த குற்றச்சாட்டுக்கு, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பதிலடி கொடுத்துள்ளார். “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை புரிந்து கொண்டே துணைவேந்தர்கள் புறக்கணித்தனர்; தமிழக அரசு எந்த விதத்திலும் தலையீடு செய்யவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பின்னணி
ஏப்ரல் 8-ஆம் தேதி, ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்படாமல் இருந்த சட்ட மசோதாக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடுமையான தீர்ப்பை வழங்கியது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்க முதலமைச்சருக்கே அதிகாரம் எனத் தெரிவித்தது மட்டுமின்றி, ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கவனத்தை பெற்றது.
ஆளுநரின் மாநாடு – புறக்கணிப்பில் பரபரப்பு
இந்த தீர்வுக்குப் பிறகு, ஊட்டியில் துணைவேந்தர்களுடன் மாநாட்டை ஆளுநர் ரவி கூட்டினார். ஆனால், அழைக்கப்பட்ட 41 துணைவேந்தர்களில் 10க்கும் குறைவானோர் மட்டுமே பங்கேற்றனர். இதனால் ஏற்பட்ட குழப்பத்தில், ஆளுநர், “மாநாட்டில் பங்கேற்க துணைவேந்தர்களைத் தடுக்கும் வகையில் காவல்துறை பயன் படுத்தப்பட்டது” என கடும் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
அமைச்சரின் பதிலடி
இந்த குற்றச்சாட்டை முற்றிலும் முறியடித்த அமைச்சர் கோவி செழியன், “துணைவேந்தர்கள் நீதிமன்ற தீர்ப்பை மதித்து, சட்டத்திற்கேற்ப செயல்பட்டிருக்கிறார்கள். இதற்காக தமிழக அரசை குற்றம் சாட்டுவது தவறானது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “மாநாட்டில் பங்கேற்க மேதாவியாக இருக்க வேண்டியதில்லை; சமூக நியாயமும், சட்டப்பூர்வமுமான முடிவும் அது” என்றார்.
ஆளுநர் செயல் அரசியல் நோக்கமா ?
“மசோதாக்களை ஒப்புதல் அளிக்க தவறியதன் பின்னணி ஆளுநரிடமே உள்ளது. அவரே தீர்ப்புக்கு பதிலடி கொடுக்க மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கிறார். இது அரசியல் நோக்கத்தோடு செய்யப்படும் நடவடிக்கை. சட்டத்தை மீறிய கூட்டத்தில் பங்கேற்பது துணைவேந்தர்களின் பொறுப்பல்ல” என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
துணை ஜனாதிபதி பங்கேற்பும் விமர்சனமும்
ஆளுநர் கூட்டிய மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்றதிலும் அமைச்சர் எதிர்வினை தெரிவித்தார். “திமுக அரசு வழக்காக அரசியலுக்கு சட்ட வழி மூலம் பதிலளிக்கிறது. அதனால் தான் மசோதா விவகாரத்தில் வெற்றி பெற்றோம்” என்றார்.
மாநிலத்தின் கல்வி துறையில் நீடித்திருக்கும் ஆளுநர், அரசு மோதல் மீண்டும் தீவிரமாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியல் சூழ்நிலையை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. “மிரட்டல் அரசியல் பாஜகவின் டி.என்.ஏவில் இருக்கலாம், ஆனால் மாநில உரிமைக்காக துணிந்து பேசுவது திமுகவின் டி.என்.ஏ” என கூறிய அமைச்சர் கோவி.செழியனின் வார்த்தைகள், இந்த விவகாரத்தின் அரசியல் தாக்கத்தை நம்முன் விரிவாகக் காட்டுகின்றன.