கோவை:
தமிழக வெற்றிக்கழகத்தின் (TVK) பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக கோவைக்கு வந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜய், கோவை விமான நிலையத்தில் 2000-க்கும் மேற்பட்ட தொண்டர்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்டார்.
இன்று மற்றும் நாளை (சனி, ஞாயிறு) கோவை குரும்பபாளையத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க தனி விமானம் மூலம் விஜய் வந்தார். விமான நிலைய வளாகத்திலேயே திடீரென திரண்ட தொண்டர்கள், கை வீசியும், மலர்களால் அலங்கரித்த துண்டுகளை அணிவித்து, அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலை சந்திப்புவரை, வழித்தோறும் தொண்டர்கள் வெள்ளமே காட்சியளித்தது. சிலர் மரங்களில் இருந்து குதித்து விஜயை பார்க்க முயற்சித்த நிலை ஏற்பட்டது. அவர்களை கவனித்த விஜய், கார் நிறுத்தி கைகளை அசைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், மேலே தொங்கிய தொண்டர்களை பாதுகாப்பாக கீழே இறங்க அறிவுறுத்தினார்.
பின்னர், பிரத்தியேக கேரவன் மூலம் விஜய் அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்று தங்கினார். அவரது வருகையால் அவிநாசி சாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.