நாகப்பட்டினம் மாவட்டம்
நாகை புதிய பேருந்து நிலைய டாஸ்மாக் கடையை மூடக்கோரி வீ த லீடர்ஸ் அமைப்பினர் ஆர்பாட்டம்
புதிய பேருந்து நிலைய வணிக வளாகத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி வீ த லீடர்ஸ் அமைப்பினர் டாஸ்மாக் கடை முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வாரத்தில் கடையை மூடாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, வழிபாட்டு தலங்கள், மருத்துவமனை, பள்ளிக்கூடம் மற்றும் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட அரசாணை பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் அரசு மதுபான கடைகள் மூடப்பட்டன.
ஆனால் நாகை புதிய பேருந்து நிலைய வணிக வளாகத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை மட்டும் இதுவரை மூடப்படவில்லை. பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் உள்ளிட்டோர் இதனால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனைக் கண்டித்து வீ த லீடர்ஸ் அமைப்பின் பொறுப்பாளர் ஆறுமுகம் தலைமையில் டாஸ்மாக் கடை எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் *ராஜேஷ், பாலாஜி, சக்திராஜ், மாரீஸ்வரன், திருமதி. பாரதி, சரவணன், தெட்சணாமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டு டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் ஒரு வார காலத்திற்குள் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அமைப்பினர் அறிவித்தனர்.













