நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களை அச்சுறுத்தும் வகையில், அங்குள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை ‘ரிசர்வ் ஃபாரஸ்ட்’ (காப்புக்காடு) ஆக மாற்ற தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் இந்த நகர்வு சாதாரண எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயல் எனச் சாடியுள்ளார்.
இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து விளக்கியுள்ள அண்ணாமலை, “கடந்த 1969-ஆம் ஆண்டு ‘ஜென்ம ஒழிப்பு சட்டத்தின்’ கீழ் தமிழக அரசால் சுமார் 80,087 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில் ஏற்கனவே 29,982 ஏக்கர் நிலம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள நிலங்களில் சுமார் 34,986 ஏக்கர் தேயிலைத் தோட்டங்களின் வசமும், சுமார் 15,000 ஏக்கர் நிலம் பொதுமக்களிடமும் உள்ளது. இந்த 15,000 ஏக்கர் நிலத்தில் தான் ஆயிரக்கணக்கான சிறு விவசாயிகள் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் எனச் சிறிய நிலப்பரப்பில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலங்களே அவர்களின் வாழ்வின் ஒரே ஆதாரமாகத் திகழ்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய மனுவே இந்தப் பதற்றத்திற்குக் காரணமாகியுள்ளது. அந்த மனுவில், வெறும் 3,474 ஏக்கர் நிலத்தை மட்டுமே வருவாய்த் துறைக்கு மாற்ற அனுமதி கோரியுள்ள அரசு, மீதமுள்ள 31,150 ஏக்கர் நிலத்தைக் காப்புக் காடுகளாக மாற்ற அனுமதி கேட்டுள்ளது. அரசின் இந்தத் திட்டம் நிறைவேறினால், பல தசாப்தங்களாக அதே மண்ணில் உழைத்து வரும் மக்கள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்படும் அபாயம் ஏற்படும் என அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
“விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டிய அரசே, அவர்களை அகதிகளாக மாற்றத் துடிப்பது கண்டிக்கத்தக்கது. காப்புக் காடுகள் என்ற பெயரில் அப்பாவி மக்களின் நிலங்களைப் பறிக்கும் முயற்சியைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்” எனத் தனது அறிக்கையில் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கூடலூர் பகுதியில் நிலவி வரும் இந்த நீண்ட கால ‘செக்சன்-17’ (Section-17) நிலப் பிரச்சினை, தற்போது உச்ச நீதிமன்ற மனுவின் மூலம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் மலை மாவட்ட மக்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
