மயிலாடுதுறையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (கலை பண்பாட்டு இயக்ககம்) சார்பில் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு நாடக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் சங்கரதாஸ் சுவாமிகளின் படத்தை கையில் ஏந்தி நாட்டுப்புற கலைஞர்கள் காளி ஆட்டங்களுடன் மேலதாள வாத்தியங்கள் இசைக்க கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற பேரணி பொதுமக்களை கவர்ந்தது. மயிலாடுதுறை சின்னக்கடை தெருவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, விழா நடைபெறும் இடத்துக்கு வந்தனர். விழாவில் முத்தாய்ப்பாக கலைமாமணி பழனி குழுவினரின் அரிச்சந்திரா நாடகம் நடைபெற்றது.
வாய்மையின் சின்னமான அயோத்தி மன்னன் அரிச்சந்திரன், தனது சத்தியத்தைக் காக்க, நாடு, மனைவி, மகன் என அனைத்தையும் இழந்து, இறுதியில் அனைத்தையும் மீட்டு, வானுலகம் செல்லும் ஒரு புகழ்பெற்ற புராண கதையை, அரிச்சந்திரன், சந்திரமதி, விசுவாமித்திரன் சிவபெருமான் பார்வதி உள்ளிட்ட வேடங்களை அணிந்த நாடகக் கலைஞர்கள் தத்துரூபமாக செய்து காண்போரை வியப்பில் ஆழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமார் கலந்துகொண்டு நாடக கலைஞர்களை வெகுவாக பாராட்டினார்.













