மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் எப்படி நடக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
தமிழ்நாடு சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உள்ள 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதை முன்னிட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜுலை 24ம் தேதியுடன் திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் வில்சன், தொமுச பேரவைத் தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
அதோடு அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோர்களின் பதவிக்காலமும் நிறைவடைய உள்ளது. இதையடுத்து காலியான பதவிகளுக்கான தேர்தல் முன்கூட்டியே ஜுன் 19ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மொத்தம் 545 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் 39 உறுப்பினர்கள் உள்ளனர். அதேநேரம், ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் உள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களால் வாக்களித்து தேர்தெடுக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டிற்கு அந்த வகையில் மொத்தம் 18 மாநிலங்களவை இடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு தான் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.