தமிழ்நாட்டில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக தரப்படும் 20 லட்சம் மடிக்கணினிகளை உருவாக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு நிறுவனமான எல்காட் (ELCOT), ஒரு சர்வதேச டெண்டரை அறிவித்துள்ளது.
2011-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம், ஏராளமான மாணவர்கள் கணினி அறிவைப் பெற்றனர். ஆனால், இந்த திட்டம் 2019-ல் நிறுத்தப்பட்டது.
திமுக தலைமையிலான தற்போதைய ஆட்சி காலத்தில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சமீபத்திய பட்ஜெட் கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தரமான மடிக்கணினிகளை வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, தற்போது 20 லட்சம் மடிக்கணினிகளுக்கான உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
மடிக்கணினி அம்சங்கள்:
- 8 GB RAM
- 256 GB SSD மெமரி
- 14 இஞ்ச் திரை
இவற்றை கொண்டுள்ள நவீன வகை மடிக்கணினிகள் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச அளவில் திறந்த டெண்டராக அறிவிக்கப்பட்டுள்ளதால், பல முன்னணி நிறுவனங்கள் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், மாநிலத்திலுள்ள பல லட்சம் மாணவர்களுக்கு டிஜிட்டல் கல்வி மற்றும் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் பெரிய வாய்ப்பாக அமையும் என கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.