சீர்காழி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 7 அடி முதலை மீட்பு,வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள குன்னம் கிராமத்தில், அய்யானார் கோவில் குளத்தை அந்தப் பகுதி மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கும், கால்நடைகளைக் குளிப்பாட்டுவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்தக் குளத்தில் முதலை ஒன்று நடமாடுவதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக சீர்காழி வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில், சீர்காழி வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குளத்தில் பதுங்கியிருந்த முதலையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.சுமார் 7 அடி நீளம்,50 கிலோ எடை கொண்ட முதலை
கிராம மக்களை அச்சுறுத்தி வந்த அந்த முதலையை வனத்துறையினர் லாவகமாகப் பிடித்தனர்.
பிடிபட்ட முதலை பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு, அணைக்கரை பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் விடப்பட்டது. வனத்துறையினரின் இந்த துரித நடவடிக்கையைப் பாராட்டியுள்ள அப்பகுதி மக்கள், தற்போது அச்சமின்றி குளத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.














