விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் அமைப்பில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் – புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு ஆலோசனை
விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பணிகளை சீரமைத்து, கட்சியை வலுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைமையின் வழிகாட்டுதலின்படி, தமிழகம் முழுவதும் கட்சியின் அமைப்பு பணிகளை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்கள், நகரங்கள், பேரூராட்சிகள் மற்றும் மண்டல கமிட்டிகளை சீரமைத்து, கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மாவட்ட அமைப்பு மறுசீரமைப்பு பணிக்கான பார்வையாளராக ஜெயக்குமார் பங்கேற்று தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மூத்த நிர்வாகிகளின் அனுபவத்தையும் ஆலோசனைகளையும் பயன்படுத்துவதுடன், இளைஞர்களுக்கு கட்சியின் அமைப்பில் அதிக வாய்ப்புகளை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக ஒன்றியம், நகரம், பேரூர் மற்றும் மண்டல அளவில் நிர்வாகிகளை சந்தித்து அவர்களது கருத்துகள் கேட்கப்பட உள்ளன. அதன் அடிப்படையில் வட்டாரத் தலைவர்கள், நகரத் தலைவர்கள், பேரூர் தலைவர்கள் மற்றும் மண்டலத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மூத்த நிர்வாகிகளின் வழிகாட்டுதலுடன் இளைஞர்களை கட்சிப் பணிகளில் முன்னிலைப்படுத்தி, காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்துவதே இந்த அமைப்பு மறுசீரமைப்பு பணியின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், 2029ஆம் ஆண்டு ராகுல் காந்தி தலைமையில் மத்திய ஆட்சியை அமைக்கும் நோக்கில் கட்சியின் அடிப்படை அமைப்புகளை வலுப்படுத்தும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி அல்லது தொகுதி பங்கீடு குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்றும், கட்சியின் அமைப்பு மறுசீரமைப்பு பணிகள் குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவா, மாநில துணை செயலாளர் குலாம் மொய்தீன்,நகர தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட மாவட்ட மற்றும் வட்டார அளவிலான காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பேட்டி:ஜெயகுமார்,விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்














