வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற நாடி ஜோதிடம் மூலம் தேர்தல் கணிப்புகள் வெளியீடு, மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி கட்சிகள் உதவியுடன் பதவியேற்பார் என்று பிரபல நாடி ஜோதிடர் கணிப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில், புகழ்பெற்ற வைத்தியநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நவகிரகங்களில் செவ்வாய்க்கு உரிய ஆலயமான இந்த ஊரில், நாடி ஜோதிடம் பார்க்கும் தொழில் மிகவும் பிரபலமாகும். வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோதிடம் இந்திய அளவில் புகழ் பெற்றதாகும். தினந்தோறும் இந்தியா முழுவதும் இருந்து நாடி ஜோதிடம் பார்க்க இங்கு பக்தர்கள் வருகை தருவர். இதற்காக நூற்றுக்கணக்கான நாடி ஜோதிட நிலையங்கள் இங்கு அமைந்துள்ளன. மகா சிவ நாடி ஜோதிடம், அகத்தியர் நாடி, பிருகுநாடி உள்ளிட்ட பல்வேறு சித்தர்களின் நாடிகள் ஓலைச்சுவடி வடிவில் ஜோதிடம் பார்ப்பவர்களுக்கு வாசிக்கப்படுகின்றன. தொழில், மணவாழ்க்கை, ஆரோக்கியம், எதிர்காலம் இவை பற்றி ஓலைச்சுவடியில், சித்தர்களின் பாடல் வடிவில் நாடி ஜோதிடம் பார்க்கப்படுகிறது. நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு, யார் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்கள் என்பது குறித்து மகா சிவ நாடி ஜோதிடம் பார்க்கப்பட்டது. சிவபெருமான் பாடல் வடிவில் கூறியுள்ளதாக ஓலைச்சுவடி பாடலில், சிவனின் இளைய மகன் பெயர் கொண்ட நபர் நல்லவர்கள் துணையுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என்று ஆருட காண்ட நாடி ஜோதிடத்தில் ஓலைச்சுவடி வந்துள்ளது. இதுகுறித்து மகா சிவ நாடி ஜோதிடர் சிவசாமி தெரிவிக்கும் பொழுது, கடந்த 2021 ஆம் ஆண்டு மு க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று நாடியில் வந்தது. மூன்றாவது முறையாக 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பதவியேற்பார் என நாடி ஜோதிடம் பார்க்கப்பட்டது. தற்பொழுது சிவனின் இளைய மகன் என முருகன் பெயர் கொண்டவர் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார் என நாடியில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி உதவியுடன் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்பார் என தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய பல்வேறுக்கணிப்புகள் வெளிவந்திருக்கும் நிலையில், நாடி ஜோதிடம் தேர்தல் குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது














