நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய திருவாரூர் மூதாட்டி – பத்திரமாக மீட்டு தர கோரி அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை..
திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் விஜயகுமார் ஆகியோரின் தாயார் 76 வயது மூதாட்டி கலைச்செல்வி என்பவர் கடந்த 23ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆன்மீக சுற்றுலாவில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார்.
இவருடன் மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மொத்தம் 57 பயணிகள் ஆன்மீக தலங்களுக்கு சுற்றுலா மேற்கொண்டனர்.
புகழ்பெற்ற ஆன்மீக தலங்களான கேதார்நாத், டெல்லி, முக்திநாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆன்மீக வழிபாடு மேற்கொண்ட இவர்கள் சுற்றுலாவின் ஒரு பகுதியாக நேபாள நாட்டில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அச்சமயம் நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களிலும் திடீர் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில் திருவாரூரை சேர்ந்த கலைச்செல்வி உள்ளிட்ட 57 சுற்றுலா பயணிகள் சென்ற வாகனங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை அவர்களது உறவினர்கள் தொடர்பு கொள்ள முயன்ற போதும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
சுற்றுலா சென்றவர்கள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என அவரது உறவினர்கள் இறைவனை வேண்டி வருகின்றனர்.
தமிழக அரசும் இந்திய அரசும் நேபாள நாட்டில் சிக்கி உள்ளவர்களை பத்திரமாக மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த 23ஆம் தேதி ஆன்மீக சுற்றுலா சென்ற இவர்கள் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி சுற்றுலா முடிந்து ஊர் திரும்ப முடிவு செய்துள்ள நிலையில் நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியது தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக தமிழக அரசும், இந்திய அரசும் தலையிட்டு ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்ற 57 தமிழர்களை பத்திரமாக மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டுமென அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பேட்டி : சுரேஷ்குமார் – நிலச்சரிவில் சிக்கி உள்ள மூதாட்டியின் மகன்















