சிவான், பீஹார் : காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் சேர்ந்து பீஹார் மாநிலத்தை பல ஆண்டுகளாக கொள்ளையடித்து, வறுமை மிக்க மாநிலமாக மாற்றி விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக பீஹார், ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு சென்றுள்ளார். அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பீஹார் மாநிலம் சிவானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
முதலில், அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாருடன் ரோடு ஷோவில் பங்கேற்ற பிரதமர், பொதுமக்களின் உற்சாக வரவேற்பை பெற்றார். அதையடுத்து மர்ஹோவ்ரா ரயில் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயில் இன்ஜினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது, கினியா குடியரசுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
மேலும், ₹400 கோடி மதிப்பிலான நியூ வைஷாலி – தியோரியா ரயில் பாதை, முசாபர்பூர் – கோரக்பூர் வந்தே பாரத் ரயில் சேவை, ₹500 மெகாவாட் மின்சார எரிசக்தி சேமிப்பு திட்டம் உள்ளிட்டவை ஆரம்பிக்கப்பட்டன. ₹1,800 கோடியில் 6 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும், ₹3,000 கோடி மதிப்பில் நீர் வழங்கல் மற்றும் சுகாதார திட்டங்களும் அடிக்கல் நாட்டப்பட்டன. பி.எம்.ஏ.ஒய். நகர்ப்புற திட்டத்தின் கீழ் வீடுகளும் வழங்கப்பட்டன.
பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “சுதந்திர போராட்ட வீரர்களை பெற்ற பீஹார், இன்று தேசிய வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. எனினும், கடந்த ஆண்டுகளில் காங்கிரசும் ஆர்.ஜே.டி யும் பீஹாரை பின் தள்ளியுள்ளனர். மக்கள் புலம்பெயர் தொழிலாளர்களாக மாற வேண்டிய நிலையை உருவாக்கினர்,” எனக் குற்றம்சாட்டினார்.
“நாங்கள் வெளிப்படையான மற்றும் பொறுப்பான வளர்ச்சியை கொண்டு வருகிறோம். கடந்த 11 ஆண்டுகளில் ஏழைகளுக்கு இடையூறாக இருந்த தடைகளை அகற்றுவதில் நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். இன்று, அதன் பலன்கள் மக்களால் காணப்படுகின்றன. இந்தியா விரைவில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்; இதில் பீஹாரும் முக்கிய பங்கு வகிக்கும்,” எனவும் அவர் கூறினார்.