அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சந்தீப் ரெட்டி வங்கா, தொடர்ந்து ‘கபீர் சிங்’, ‘அனிமல்’ போன்ற ஹிட் படங்களை கொடுத்து பாராட்டு பெற்றவர். ஆனால், இவரது படங்களில் காணப்படும் பிற்போக்கான காட்சிகள் மற்றும் அவர் அளிக்கும் நேர்காணல்களில் உள்ள கருத்துகள் தொடர்ந்து சர்ச்சைகளுக்குள்ளாகி வருகின்றன.
தற்போது, நடிகர் பிரபாஸை வைத்து இயக்கிவரும் ‘ஸ்பிரிட்’ திரைப்படம், இப்படத்தில் கதாநாயகியாக இருந்த தீபிகா படுகோனேவுடன் இயக்குனருக்கு ஏற்பட்ட முரண்பாட்டால், பெரும் விவாதத்திற்கும், வதந்திகளுக்கும் காரணமாகியுள்ளது.
ஸ்பிரிட் பட விவகாரம்
முதலில் ‘ஸ்பிரிட்’ படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது. ஆனால், சில காரணங்களால் அவர் இப்படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது. தற்போது, ‘அனிமல்’ பட நடிகை திரிப்தி திம்ரி இந்த கதாநாயகி இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் சந்தீப் வங்கா தனது சமூக வலைதளத்தில், “ஒரு நடிகருக்கு கதை சொன்னால், அதை வெளியில் சொல்வது தவறு. யாரும் யாரையும் கீழே தள்ளக்கூடாது,” என்ற உருக்கமான பதிவை வெளியிட்டார். இதனையடுத்து, அவர் குறித்தது தீபிகாவைத்தான் என்றே பலர் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த தீபிகா படுகோனே, சமீபத்திய பேட்டியில், “ஒரு இயக்குனர் என்னை அணுகினார். ஆனால், சம்மந்தப்பட்ட ஹீரோவுக்கு அதிக சம்பளம் கொடுக்கவேண்டும் என்பதால், என்னுடைய சம்பள கோரிக்கையை நிராகரித்தார்கள். எனவே, சமத்துவம் இல்லாத சூழலில் நான் பணியாற்ற விரும்பவில்லை,” எனக் கூறியிருந்தார்.
வேலை நேரமும், சம்பளமும் காரணமா ?
தற்போது, இந்த மோதலுக்குப் பின்னால் பணம் மற்றும் வேலை நேரம் தொடர்பான காரணங்களும் உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்மையுக்குப் பிறகு தீபிகா படுகோனே, தினசரி 6 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய முடியாது எனவும், அதன் காரணமாக அதிக சம்பளமும் வேண்டுமென கோரியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ‘ஸ்பிரிட்’ படத்திலேயே அவரை மாற்ற வேண்டிய நிலை உருவானதாகவும் செய்திகள் சொல்கின்றன.
கல்கி 2-இலிருந்து விலகலா ?
இந்நிலையில், நாக் அஷ்வின் இயக்கும் ‘கல்கி 2’ படத்திலிருந்தும் தீபிகா படுகோனேவை விலக்க படக்குழு பரிசீலனை செய்துவருவதாக தகவல்கள் கூறுகின்றன. குறைந்த வேலை நேரம் மற்றும் படப்பிடிப்பு ஒழுங்குகளை பாதிக்கும் நிலைமை காரணமாக இந்த முடிவை தயாரிப்பாளர்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக தீபிகா படுகோனேவோ, படக்குழுவோ எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.