சென்னை, ஜூன் 2, 2025: தமிழ்நாட்டில் 2025-26 கல்வியாண்டிற்கான பாடநூல்கள், சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம், மாணவர்களின் கற்றல் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், சுமார் ₹1141 கோடி மதிப்பிலான கல்வி பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதில்,
- ₹311 கோடி மதிப்பிலான 4.30 கோடி பாடநூல்கள்
- ₹457 கோடி மதிப்பிலான 1.3 கோடி சீருடைகள்
- ₹162 கோடி மதிப்பிலான 9.6 கோடி நோட்டு புத்தகங்கள்
- ₹211 கோடி மதிப்பிலான பிற கல்வி உபகரணங்கள் உள்ளடக்கம்.
இதில், புத்தகப்பைகள், காலணிகள், மழைக்கோட்டுகள், கிராயான்ஸ், கணித உபகரணப் பெட்டிகள், புவியியல் வரைபடங்கள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.
முதல்வர், மாணவ, மாணவியர்களுடன் உரையாடியும், திறனறி வகுப்பறைகளில் மாணவர்களோடு நேரில் அமர்ந்தும், ஆசிரியர்களின் வகுப்புகளை பார்வையிட்டும் சிறப்பாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டம், கல்வி தரத்தை உயர்த்தவும், அனைத்து மாணவர்களும் தரமான கல்வியை சமமாக பெறும் சூழலை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.