மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் ஓரவஞ்சனை செய்வதோடு விவசாயிகளையும் வஞ்சித்து வருகிறது என்று மயிலாடுதுறை எம்.பி சுதா குற்றச்சாட்டு :-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜமால் முகம்மது யூனூஸ், நிவேதா எம்.முருகன், செந்தில்செல்வன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மாநகராட்சி, நகராட்சி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட இ-சேவை மையம், நில அளவை, சுகாதார நலப்பணிகள், பள்ளி கல்வித்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம், சத்துணவு, புவியீயல் மற்றும் சுரங்கங்கள் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், மாவட்ட தொழில் மையம், மாவட்ட திறன் பயிற்சி நிறுவனம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், சமூக நல அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், செயல்படுத்தப்படும் மத்திய அரசின் நிதி சார்ந்த திட்டத்தின் கீழ் தேசிய வேளாண் வளர்;ச்சித்திட்டம், தேசிய ஊரக குடிநீர் வழங்கும் திட்டம், ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய சமூக பாதுகாப்புத் திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி அவாஸ்யோஜனா, தீனதயாள் அந்தோதயாயோஜனா, பிரதமந்திரி கிராம சாலைகள் திட்டம், பாராளுமன்ற உள்ளுர் வளர்ச்சித் திட்டம், அழகிய நகரமயமாக்கல் பணி, உட்கட்டமைப்பு தொடர்பான பணிகள் – தொலை தொடர்பு, அஞ்சல்துறை, ரயில்வே, நெடுஞ்சாலை, சுகம்யா பாரத் அபியான் உள்ளிட்ட பல்வேறு திட்ட செயலாக்கங்கள் குறித்து, கண்காணிப்புக் குழுவின் தலைவரான மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக செய்யப்பட்ட மத்திய மாநில அரசாங்கத்தின் திட்டங்கள் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை கண்காணிக்கும் விதமாக அனைத்து துறையினரும் கலந்து கொண்டனர். மேலும், ஒவ்வொரு திட்டத்தின் கீழ் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, எவ்வளவு மக்கள் பயன்பெற்றுள்ளனர், திட்டத்திற்கான இலக்கீடு எவ்வளவு, அதில் தற்போதுவரை இலக்கீடு எவ்வளவு எய்தப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை முழுமையாக தராமல் ஒரவஞ்சனை செய்து வருகிறது. ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பச்சை பயிறு கொள்முதல் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டிற்கான இலக்கு மிககுறைவாக ஒதுக்கி தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் மூலம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து பச்சைபயிறு முழுமையாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் அம்ரித்பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்றவரும் மேம்பாட்டு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகுதான் எக்ஸ்லேட்டர், லிப்ட் சேவைகள் பயன்பாட்டிற்கு வரும் என்றார். இக்கூட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள் அவர்களது பகுதியில் உள்ள தேவைகள் குறித்து கண்காணிப்புக் குழு தலைவரிடம் தெரிவித்தனர். மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், திட்டப்பணிகளை தரமாகவும் விரைந்து செயல்படுத்தியும் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென்று மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்தெரிவித்தார்.














