மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் கோயிலில் சம்வத்ஸ்ராபிஷேகம் எனப்படும் வருஷாபிஷேகம்:- 1008 கலசபிஷேகம், 108 சங்க அபிஷேகம் நடைபெற்றது:-
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மாயூரநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், தேவாரப் பாடல்கள் பாடப்பட்டதுமான இக்கோயிலில் கடந்த 2023- ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்று 3 ஆண்டுகள் பூர்த்தியாகி, நான்காம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, சம்வத்ஸ்ராபிஷேகம் எனப்படும் வருஷாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயில் கொடிமரம் முன்பு 1008 கலசங்கள் மற்றும் 108 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது. தொடர்ந்து கலச நீர் கொண்டு மாயூரநாதர் சுவாமிக்கும், சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீர் கொண்டு அபயாம்பிகை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து திருவாபடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சுவாமி, அம்பாள், மகாகணபதி, ஆறுமுகர், சுப்பிரமணியர், துர்க்கை ஆகிய சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.














