இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரும், சென்னை வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
38 வயதான அஸ்வின், 2010ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பின்னர் 2011 உலகக் கோப்பையும், 2013 சாம்பியன்ஸ் கோப்பையும் வென்ற இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில், தனது ஐபிஎல் ஓய்வு குறித்து அஸ்வின் சமூக வலைதளத்தில்,
“ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும். ஒரு ஐபிஎல் வீரராக எனது பயணம் இன்று நிறைவடைகிறது. ஆனால், பல்வேறு லீக்குகள் மற்றும் கிரிக்கெட்டின் பிற தளங்களை ஆராயும் எனது பயணம் இப்போது தொடங்குகிறது. அனைத்து அற்புதமான நினைவுகள், உறவுகள், குறிப்பாக ஐபிஎல் நிர்வாகம், பிசிசிஐ மற்றும் அணி உரிமையாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. வருங்காலத்தை சிறப்பாக அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
கடந்த சீசனில் சென்னை அணிக்காக விளையாடிய அஸ்வின், திடீரென ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்திருப்பது, அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து ஐபிஎல் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.















