ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி : ரசிகர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு !

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியை டிக்கெட் வாங்கியும் காண இயலாத ரசிகருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி, சென்னை பனையூரில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, செப்டம்பர் 10-ஆம் தேதி அதே நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் மாத டிக்கெட்டுகள் செல்லுபடியாகும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால், நிகழ்ச்சி நாளன்று அதிகமான கூட்டம் காரணமாக, டிக்கெட் வைத்திருந்த பலரும் உள்ளே செல்ல முடியாமல் வெளியே நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. சிலர் மயக்கம், மூச்சுத் திணறல் போன்ற உடல்நிலை பிரச்னைகளுக்கு முகம்கொடுத்ததாக புகார்கள் வந்தன.

இதனையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ACETIC நிறுவனம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இருவரும் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அர்ஜூன் என்பவர், டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாததற்காக, மன உளைச்சல் மற்றும் நஷ்டத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், அர்ஜூனுக்கு ரூ.50,000 இழப்பீடு மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.5,000 வழங்க, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை இரண்டு மாதத்துக்குள் செலுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளது.

Exit mobile version