திமுக கூட்டணி எந்த நேரத்தில் உடையும் என்பதே தெரியவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களை காப்போம்-தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தை முன் வைத்து சட்டமன்ற தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதிக்கு சென்ற அவர், ரோட்ஷோ நிகழ்ச்சி மூலம் ஆதரவு திரட்டினார்.
அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளை பாதுகாக்கும் அரசாக அதிமுக ஆட்சி விளங்கியதாக குறிப்பிட்டார். மீத்தேன், ஈத்தேன் திட்டங்களுக்கு அனுமதி கொடுத்து விவசாய நிலங்களை திமுக அழிக்க பார்த்தது. ஆனால், டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட, வேளாண் மண்டலமாக அறிவித்து, வேளாண் நிலங்களை அதிமுக அரசு பாதுகாத்ததாகவும் கூறினார்.
அதிமுக-பிஜேபி கூட்டணி வலிமையான கூட்டணி என்று தெரிவித்த அவர், 210 தொகுதிகளில் தங்களது கூட்டணி வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன், அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வண்டியில் பூட்டப்பட்ட மாடுகள் போன்றது. ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கருத்தை கூறி வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

















