உலக புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் நிறுவனம் டெஸ்லா, இந்தியாவில் தனது வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மும்பையில் தனது முதல் ஷோரூமை திறந்து வைத்து, வாகன விற்பனையைத் தொடங்கியுள்ளது. இந்த ஷோரூமை மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் திறந்து வைத்தார்.
உலகின் மூன்றாவது மிகப்பெரிய வாகன சந்தையாக திகழும் இந்தியாவில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட டெஸ்லா நிறுவனம் தனது செயல்பாடுகளை தொடங்கியுள்ளது.
தற்போது ஐரோப்பா மற்றும் சீனாவில் மின்சார கார்கள் விற்பனை குறைந்த நிலையில், புதிய சந்தையாக இந்தியாவை டெஸ்லா தேர்ந்தெடுத்துள்ளது. ஆரம்ப கட்டமாக, சீனாவின் ஷாங்காய் ஆலையில் இருந்து ‘மாடல் ஒய் (Model Y)’ வகை மின்சார கார்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
மும்பையின் குர்லா பகுதியில், ஆப்பிள் ஸ்டோருக்கு அருகே அமைந்துள்ள 4,000 சதுர அடியில் டெஸ்லாவின் முதல் ஷோரூம் செயல்படத் தொடங்கியுள்ளது. இதில் ‘மாடல் ஒய்’ மின்சார கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ.60 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ‘Model Y Long Range’ எனும் உயர் வேரியண்ட் ரூ.68 லட்சத்திற்கு விற்பனைக்கு வந்துள்ளது.
மேலும், வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் தயாரித்த மின்சார கார்கள் — VF6 மற்றும் VF7 எனும் இரண்டு மாடல்களுக்கான முன்பதிவு இன்று (ஜூலை 15) முதல் தொடங்கியுள்ளது.