கோவை : சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை விழாவோடும் வேடிக்கையோடும் நடைபெற்றது. விழாவில் முன்னாள் மாணவராகவும், பிரபல நடிகராகவும், முன்னாள் மாணவர் சங்கத் தலைவராகவும் விளங்கும் சிவகுமார், அவரது மகன் நடிகர் கார்த்தி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
விழாவில் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுத் தொகைகளும் வழங்கப்பட்டன. கல்வி, வேலை, சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்த முன்னாள் மாணவர்களும் பாராட்டப்பட்டனர்.
நெகிழ்ச்சியில் கண்கலங்கிய கார்த்தி… பள்ளிக்கு நன்கொடை அறிவிப்பு!
நடிகர் கார்த்தி உரையாற்றியபோது, “தமிழக அரசுப் பள்ளிகள் இப்போது உலகத் தரத்துடன் இணைந்துள்ளன. தமிழகம் உயர்தர கல்வி வழங்கும் மாநிலமாக வளர்ந்துள்ளது” என்றார். மேலும், தனது தந்தை சிவகுமாரின் சகோதரி கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் கல்வியை தொடர முடியாத நிகழ்வை நினைவுகூர்ந்த அவர் கண்கலங்கினார்.
இந்த உணர்வுப்பூர்வமான தருணத்தில், தன்னால் முடிந்த உதவியாக 5 லட்சம் ரூபாயை பள்ளிக்கு நன்கொடையாக வழங்குவதாக அவர் அறிவித்தார். கார்த்தியின் கண்ணீரைக் கண்ட சிவகுமார் மேடையில் அவரை அணைத்துப் பிடித்து ஆறுதலளித்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது.
சிவகுமார் பகிர்ந்த சிறுவயது நினைவுகள்…
தொடர்ந்து நடிகர் சிவகுமார் தனது சிறுவயதில் எப்படி ஆசிரியர்களை பின்பற்றி வெற்றியை நோக்கி பயணித்தார் என்பதை பகிர்ந்தார். ஓவிய ஆசிரியராகும் கனவுடன் ஓவியம் பயின்றதையும், பின்னர் கருணாநிதியின் வசனங்கள் தன்னை சினிமாவுக்கே இழுத்துவந்ததையும் உருக்கமாக விவரித்தார்.
மேடையில் ஒரு வசனத்தை அரங்கேற்றி, “இது அன்பில் மகேஷுக்கு தெரிந்த வசனம் தானே?” என கேட்ட அவர், அரங்கில் சிரிப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தினார்.
அமைச்சரின் உற்சாகப் பேச்சு
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாற்றும்போது, “மாணவர்களை ஒருவருடன் ஒப்பிடக் கூடாது. ஒவ்வொருவரும் தனித்துவம் கொண்டவர்களாகவே பார்க்கப்பட வேண்டும்” என்றார். மேலும், “முதல்வர் மு.க. ஸ்டாலின் கல்விக்குத் தேவையான நிதியை அளிக்கிறதோடு, மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் நேர்மையும் முக்கியம்” எனவும் வலியுறுத்தினார்.