திருச்சி :
மலையாள திரையுலகைத் தாண்டி பேன் இந்தியா அளவில் பிரபலமடைந்த ராப் பாடகர் வேடன், தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமூக நீதியிற்காக பாடல்களில் குரல் கொடுத்து வரும் இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனுடன் வீடியோக் காலில் உரையாடிய காட்சி சமீபத்தில் வைரலானது.
இந்த உரையாடலில் திருமா, வேடனிடம் அவரது குடும்பம் குறித்து அக்கறை காட்டினார். மேலும், ஜூன் 14ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள “மதச்சார்பின்மை காப்போம்” என்ற மக்கள் எழுச்சிப் பேரணிக்கு அழைத்தும் பேசினார். “நாங்கள் 35 ஆண்டுகளாக பேசும் அரசியலை, நீங்கள் சில நிமிட பாடலில் கொண்டுசெல்லுகிறீர்கள்” என பாராட்டிய திருமாவளவன், “நீங்கள் பேசுவதால்தான் இப்படி பாட தைரியம் வந்தது” என்ற வேடனின் பதிலையும் பெற்று அன்புடன் அவரை பேரணியில் வருமாறு கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக விசிகப்பா பாவலன், ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “வேடன் பேரணிக்கு வருவது நாங்கள் வரவேற்கக்கூடிய விஷயம். அவர் எங்கள் அணியில் இணைவதில் எதிர்ப்பு இல்லை. அவர் தாய் ஈழத்தமிழர் என்பதும், சாதி ஒழிப்பு பற்றிய அவரது பாடல்களும் அவரை நெருக்கமாக்குகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், “யாரெல்லாம் சாதிக்கு எதிராக பேசுகிறார்களோ, எழுதுகிறார்களோ, பாடுகிறார்களோ அவர்கள் எல்லாம் விடுதலை சிறுத்தைகள் தான். அவசியம் முறையான உறுப்பினர் ஆக வேண்டியதில்லை. அரசியல் செய்ய அழைக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. அவருக்கு பிரச்னை வந்தால், எப்போதும் பாதுகாப்பு தரும் நிலைப்பாட்டில் தான் நாங்கள் இருக்கிறோம்” என்றார்.
வேடன், தனது பாடல்களில் அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்து, இளைஞர்களிடையே தனி அடையாளத்தை ஏற்படுத்தியவர். ஈழத்தமிழ் தாய், கேரளப் பூர்வீக தந்தை என இருமைக் பாரம்பரியத்துடன் உள்ள வேடன், அரசியல் களத்தில் கால்தூக்கும் தருணம் இதுதானா என்பது, ஜூன் 14 பேரணியின் மையக் கவனம் ஆக இருக்கிறது.