சென்னை : “தமிழகத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு பெண்கள் தான்” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள புத்தகப் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், பெண்கள் நாட்டின் வளர்ச்சியில் பங்களிக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
“ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி நோக்கில் தமிழகம் பயணிக்கிறது. இதில் பெண்களின் பங்கு இன்றியமையாதது. அவர்களுடைய பங்களிப்பு இல்லாமல் இந்த இலக்கை எட்ட முடியாது. இன்று தமிழகத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு பெண்கள் தான்,” என்று முதல்வர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
“இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய தொழில்கள் தொடங்க கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் தேவைகளை நிறைவேற்றுவதில் உலக வங்கி முக்கிய பங்காற்றுகிறது. அதன் உதவியுடன் அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.”
“சென்னையில் விரைவில் தாழ்தள எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வளர்ச்சி அடையும் துறைகளில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்,” என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் 9.69% என்ற பொருளாதார வளர்ச்சியுடன் “எஞ்சின் ஆஃப் இந்தியா” என பெயரிடப்பட்டுள்ள தமிழகம், 2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய உறுதியாக பயணிக்கிறது எனவும் முதல்வர் உறுதி தெரிவித்துள்ளார்.