நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, இந்த கணக்கெடுப்பு எப்போது நடைபெறும் என்பதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2027 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் மக்கள்தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பனி சூழ்ந்த பகுதிகளான லடாக், ஜம்மு & காஷ்மீர், உத்தராகண்ட் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளில், கணக்கெடுப்பு 2026 அக்டோபர் 1ஆம் தேதி ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம், 1948 மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு விதிகள், 1990 ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இதில் சேகரிக்கப்படும் தரவுகள் 2028 இறுதிக்கோ அல்லது 2029 தொடக்கத்திற்கோ வெளியிடப்படும் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இந்த அறிவிப்பை கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது :
“2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து தொகுதி மறுவரையறை அவசியம். ஆனால், 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிவைத்திருப்பது, தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்கும் பாஜகவின் திட்டம். இதை நாம் முன்பே எச்சரித்தோம், இன்று அது உண்மை என நிரூபணமாகியுள்ளது.”
மேலும் அவர், அண்ணா டிஎம்கே தலைவர் பழனிசாமியை, பாஜகவுடன் சேர்ந்து இந்த சதிக்குத் துணைபோகிறார் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
“டெல்லி ஆதிக்கத்திற்கு பழனிசாமி அடிபணிந்துவிட்டார் என்பது தெளிவாகியுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நியாயமான தொகுதி மறுவரையறையை வலியுறுத்தி ஒன்றுபட வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தேதி மற்றும் அதன் அரசியல் தாக்கங்கள் தொடர்பான விவாதம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.