உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலத்திலேயே முதல் முறையாக நன்னிலம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை இறுதி நாளில் தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா 2026 ஐ நிறைவேற்றியது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்பதால் இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படுகிறது என ஆளும் தமிழக வெற்றிக்கழக அரசு கூறுகிறது.
உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்றால் அரசு பல்கலைகளுக்கு போதிய நிதி வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆராய்ச்சிகளை வலுப்படுத்த வேண்டும், நவீன உள் கட்டமைப்புகள் உருவாக்க வேண்டும் இப்படி பல்வேறு பணிகள் இருக்கும் சூழலில், இதையெல்லாம் செய்ய மறுத்து உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தோடு இந்த பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறி மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் இந்த தனியார் பல்கலைக்கழக சட்டத்தை மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டிலே முதல்முறையாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் உயர்கல்வியை தனியாரிடும் ஒப்படைக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பி கல்லூரி வாயில் முன்பு தமிழக அரசு நிறைவேற்றிய தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவின் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்திலேயே முதல் முறையாக நன்னிலம் அரசு கல்லூரி மாணவர்கள் தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவின் நகலை எரித்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது..

















