மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் சித்தர்க்காடு நுகர்பொருள் வாணிபகழகம் அலுவலகம் முன்பு சாலைசாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 96 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 30 கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி தாலுகாக்களில் கடந்த ஆண்டு செயல்பட்ட கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டுமென்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தாழஞ்சேரி ஊராட்சியில் கடந்த மாதம் 20ம் தேதி முதல் கொள்முதல் தொடங்கிய நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் அரசு அறிவித்து புதிய விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதால் கடந்த மாதம் 26ம் தேதியுடன் தாழஞ்சேரி உள்பட திறக்கப்பட்ட அனைத்து கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் நிறுத்தப்பட்டது. செப்டம்பர் 1ம் தேதி கொள்முதல் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கொள்முதல் பணி தொடங்கப்படாததால் ஒவ்வொரு கொள்’முதல் நிலையங்களிலும் 3000 முதல் 5000 நெல்மூட்டைகளை அடுக்கி வைத்த விவசாயிகள் காத்து வருகின்றனர். இந்நிலையில் தாழஞ்சேரி, கொற்கை, வரகடை கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சித்தர்க்காட்டில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலக அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வந்தனர். அதிகாரிகள் முறையான பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மயிலாடுதுறை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் எம்.ஆர்.எம்.மில் வாயிலில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவ.செந்தில்குமார் மற்றும் நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்டனர். கொள்முதல் நிலையங்களில் முன்பதிவு மற்றும் பில் போடுவதற்கான டேப் மிஷின் சர்வர் பிரச்னை இருப்பதால் காலதாமதம் ஆவதாகவம் அதனை சரிசெய்த உடன் கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

















