நாகை அருகே ஸ்ரீ அசகண்ட வீரன் கோயில் ஆடி திருவிழா: 4,000 பக்தர்களுக்கு அள்ள அள்ளக் குறையாத பிரம்மாண்ட அசைவ விருந்து;
நாகப்பட்டினம் மாவட்டம், கருவேலங்கடை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழைமையான ஸ்ரீ அசகண்ட வீரன் திருக்கோயிலில், ஆடி மாத நிறைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற பிரம்மாண்ட அசைவ கிடா விருந்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தின் கடைசி திருநாளன்று அசைவ அன்னதானத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆண்டின் 45-வது ஆண்டு திருவிழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, 45-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் சுவாமிக்கு 45 கிடாய்கள் மற்றும் நாட்டுக்கோழிகள் பலியிடப்பட்டன. தொடர்ந்து, சுவாமிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, பிரம்மாண்ட முறையில் அசைவ உணவு சமைக்கப்பட்டுச் சிறப்புப் படையல் இடப்பட்டது.
படையல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, காலை முதலே உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவியத் தொடங்கினர். சுமார் 4,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து இந்த அசைவ விருந்தில் கலந்துகொண்டனர்.
நாள் முழுவதும் இடைவிடாது அன்னதானம் வழங்கப்பட்ட நிலையிலும், உணவு சிறிதும் பற்றாக்குறையின்றி ‘அள்ள அள்ளக் குறையாத’ வகையில் அனைவருக்கும் மனநிறைவோடு கிடைத்ததாகப் பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கிராமப் பிரமுகர்கள் மற்றும் கோயில் விழா கமிட்டியினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.















