சீர்காழி அருகே முதலை நடமாட்டம் – பொதுமக்கள் அச்சம்
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள அளக்குடி ஊராட்சி மேனாயிருப்பு கிராமத்தில், குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் உள்ள குளத்தில் சுமார் 6 அடி நீளமுள்ள முதலை நடமாடுவதால் பொதுமக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.இந்தக் குளத்தைச் சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி, இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தங்களது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்காக இந்தக் குளக்கரையின் அருகில்தான் விட்டு வருகின்றனர். குளத்தில் முதலை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், கால்நடைகளுக்கும், பொதுமக்களுக்கும் எப்போது வேண்டுமானாலும் பெரிய ஆபத்து ஏற்படலாம் என்ற அபாயம் எழுந்துள்ளது.குறிப்பாக, சிறுவர்களும் பெண்களும் நடமாடும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் இந்த முதலை புகுந்துள்ளதால் கிராம மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவும் பயந்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குளத்தில் உலா வரும் முதலையை உடனடியாகப் பாதுகாப்பாகப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்















