மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி அபயாம்பிகை அம்மனுக்கு நெய்க்குள தரிசனம் நடைபெற்றது. காய்கறிகளால் காதம்பரி அலங்காரம் சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சர்க்கரை பொங்கலில் பாத்தி கட்டி அதில் விட்ட நெய்யில் தெரிந்த அம்மனின் பிம்பத்திற்கு தீபாரதணை செய்து சிறப்பு வழிபாடு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோயில் உள்ளது. சிவனை மயிலுருவில் அம்மன் வழிபட்டு பாவ விமோசனம் அடைந்த தலம். பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோயிலில் உலக நன்மை வேண்டி அபயாம்பிகை அம்மனுக்கு ஆண்டுக்கு இருமுறை செய்யப்படும் நெய்க்குள தரிசனம் காட்சி இன்று நடைபெற்றது. சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் ஸ்ரீ அபயாம்பிகை அம்மனுக்கு காதம்பரி அலங்காரமும் புஷ்பங்களால் அலங்காரம் செய்யப்பட்டு நெய்க்குளம் எனப்படும் சர்க்கரை பாவாடை தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பாள் முன்பு சர்க்கரை பொங்கல் படையலிடப்பட்டு அதில் பாத்தி கட்டி நெய்யால் பாத்தி முழுவதும் நிரப்பப்பட்டது. தொடர்ந்து நெய்குளத்தில் பிரதிபலித்த ஸ்ரீ அபயாம்பிகை அம்மனுக்கு சோடச தீபாராதனை மற்றும் மகா தீபாராதனை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அபயாம்பிகை அம்மனின் நெய்க்குல தரிசன காட்சியை கண்டு வழிபாடு செய்தனர்.













