உதயநிதி ஸ்டாலின் கைது: நாகையில் திமுகவினர் திடீர் சாலை மறியல் – 100க்கும் மேற்பட்டோர் கைது
சென்னையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாகப்பட்டினத்தில் திமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டச் செயலாளர் கௌதமன் தலைமையில் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர், இன்று தம்பிதுரை பூங்கா மணிக்கூண்டு சந்திப்பு பகுதியில் திடீரென சாலையை மறித்து அமர்ந்து போராட்டம் நடத்தினர். தமிழக அரசையும் காவல்துறையையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மாவட்டத்தின் முக்கிய சந்திப்பான இப்பகுதியில் நடைபெற்ற இந்த திடீர் மறியலால் நாகப்பட்டினத்தின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்தை நடத்தினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தம்பிதுரை பூங்காவில் இருந்து தனியார் திருமண மண்டபம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பேரணியாக நடந்து சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

















