16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது..
மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 16 வயது சிறுமி ஒருவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி 7 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் மற்றும் அனைத்து மகளிர் போலீசார் விரைந்து சென்று சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமி கர்ப்பிணியாக ஆனதற்கு காரணம், செம்பனார்கோவில் பரசலூர் கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் மகன் விஜயேந்திரன் (வயது 32) என்பதும், கம்பி பிட்டரான இவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியதும் தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலக களப்பணியாளர் ஆரோக்கியராஜ்(44) என்பவர் கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பலதா மற்றும் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து விஜேந்திரனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜயேந்திரன் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

















