விழுப்புரத்தில் களிமண்ணால் உருவான காமராஜர் சிலை – கோலாகலமாக கொண்டாடப்பட்ட காமராஜரின் பிறந்த நாள்
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள அரசமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா (கல்வி வளர்ச்சி நாள்) இன்று (15.07.2026) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் அப்பள்ளியின் தமிழ் ஆசிரியரான ஹேமலதா மற்றும் மாணவ-மாணவிகள் ஒன்றிணைந்து, காமராஜரின் உருவச் சிலையைக் களிமண்ணால் தத்ரூபமாக வடிவமைத்துக் காட்சிப்படுத்தினர். இது அங்கிருந்த மாணவர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
காமராஜரின் 124-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், அவரின் 124 புகைப்படங்களைக் கொண்டு பிரம்மாண்டமான தமிழ்நாடு வரைபடத்தை மாணவர்கள் வடிவமைத்திருந்தனர். அதில், தமிழகத்தின் விவசாயக் காப்பரணாக விளங்கும் முக்கியத் தடுப்பணைகளின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை இணைத்துக் காட்சிப்படுத்தினர். இதன் மூலம் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அணைகள் குறித்து மாணவர்கள் எளிய முறையில் அறிந்து கொண்டனர்.
மேலும் ஏழை, எளிய மாணவர்களைக் காமராஜர் எப்படிப் பள்ளிக்கு அழைத்து வந்தார், மக்களுக்காக அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை, மாணவ-மாணவிகள் நெஞ்சைத் தொடும் பாடல்கள் மற்றும் ஊமை நாடகம் (Pantomime) மூலம் தத்ரூபமாக அரங்கேற்றினர்.
மேலும் இது குறித்து மாணவிகளின் கூறுகையில்,”இந்தத் தனித்துவமான விழா மூலம் காமராஜர் ஐயா பற்றிய பல புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டோம். குறிப்பாக, நம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையைக் காமராஜர் ஐயா தான் கட்டினார் என்பதை அறிந்து கொள்ளும் போது பெருமையாக இருக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இதுபோன்ற தடுப்பணைகளைத் தமிழக அரசு தொடர்ந்து சீராகப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டும்” என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வு, காமராஜரின் கல்விப் புரட்சியை நினைவுகூரும் வகையில் அமைந்திருந்தது.













