விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, 58 வியாபாரிகளுக்கு மொத்தம் ரூ.3.28 கோடி மதிப்பிலான இழப்பீட்டுத் தொகையினை வழங்கினார்.
விழா நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பன்னீர்செல்வம், பாமகவின் அன்புமணி நெருக்கடி காரணமாக கட்சியில் சேர்ந்ததாக ராமதாஸ் தெரிவித்திருந்தது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், “அது அவர்களது கட்சி விவகாரம். எங்களது தலைவராக கலைஞர் இருந்தார்; அவர் இருந்த காலம் முழுவதும் தலைவராகவே இருந்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைவராக பதவி ஏற்றார். எல்லா விடயங்களிலும் — நலத்திட்ட உதவிகள் வழங்குவதிலும், ஆட்சி நடத்துவதிலும் — நமது முதல்வர் சிறப்பாக செயற்பட்டு வருகிறார்,” என்றார்.