தரங்கம்பாடி அருகே சாத்தங்குடி கிராமத்தில் காதல் ஜோடி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி இளைஞர் தரப்பினர் சாலை மறியல்:- சிறுமியின் உடல் மயிலாடுதுறையில் தகனம்: இருவரில் மரணத்தில் தங்களுக்கு தொடர்பில்லை என சிறுமியின் தாயார் பேட்டி:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சாத்தனூர் கிராமத்தில் இன்று காலை காதல் ஜோடி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் ஆணவக் கொலை செய்துள்ளதாக இளைஞரின் தரப்பில் குற்றஞ்சாட்டினர்.
புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பார்த்திபன்(19). தலித் இளைஞரான இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவர் அருகிலுள்ள சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு நாளை கல்லூரியில் சேரவிருந்த 17 வயது சிறுமியை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இச்செய்தி பெண் வீட்டாருக்கு தெரிய வர ஏற்கனவே பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில்; நேற்று தன்னை ஜாதியை சொல்லி திட்டி தாக்கியதாக காதலியின் தந்தை உள்ளிட்டோர் மீது பி.சி.ஆர். வழக்கு பதிவு செய்ய பொறையார் காவல் நிலையம் பார்த்திபன் புகார் அளித்திருந்தார். இதையடுத்து நேற்று நள்ளிரவு போலீசார் இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். இதனிடையே சிறுமி நள்ளிரவில் வீட்டில் இருந்து மாயமானார். இதையடுத்து, சிறுமியின் தந்தை தனது மகளைக் காணவில்லை என்று பொறையார் காவல் நிலையத்தில் இன்று காலை 6.30 மணிக்கு புகார் அளித்தார்.
இந்நிலையில், போலீசார் பார்த்திபனின் செல்போன் சிக்னலை டவர் லொகேஷன் செய்தபோது, சிறுமியின் வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள குமரவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கீற்று கொட்டகையில் தனித்தனியாக தூக்கிட்ட நிலையில் காதலர்கள் இருவரும் சடலமாக தொங்கியது கண்டறியப்பட்டது.
உயிரிழந்த இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் (இளைஞர் தலித்- சிறுமி வன்னியர்) என்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை நேரிடாமல் இருப்பதற்காக ஏடிஎஸ்பி சுரேஷ், டிஎஸ்பி சரவணன் ஆகியோர் இருவரின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, 50-க்கு மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஸ்டாலின் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
பெண் வீட்டார் கொலை செய்து விட்டதாக இளைஞர்கள் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது ஆணவ கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். இதனிடையே உயிரிழந்த சிறுமியின் வீடு மற்றும் உறவினரின் வீடு மற்றும் வாகனங்களை இளைஞர் தரப்பினர்; உடைத்து சேதப்படுத்தி சென்று உள்ளனர்.
பார்த்திபன் நேற்றிரவு அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தை லட்சுமிகாந்தன், உறவினர்கள் சூர்யா, மணிமாறன், வசந்தன், விஜயகுமார் ஆகிய ஐந்து பேரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், கேர்ள் மிஸ்ஸிங் வழக்கும், சாத்தங்குடி விஏஓ ராஜா அளித்த புகாரின் பெயரில் இயற்கைக்கு மாறான மரணம் என்றும் 3 வழக்குகளை பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து பார்த்திபன் தந்தை மாரிமுத்து, இருவரும் காதலிப்பது தனக்குத் தெரியாது என்றும், சிறுமி தரப்பினர் பார்த்திபனை நேற்று இரவு 7 மணியளவில் தாக்கியதாகவும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இந்நிலையில், இவ்விவகாரத்தில் சிறுமி தரப்பினர் மீது பிசிஆர் சட்டத்தில் ஆணவப்படுகொலை என வழக்கு பதிவு செய்ய கோரி, விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இளைஞரின் தரப்பினர் மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்லப்படாமல், மயிலாடுதுறையில் உள்ள மின்தகன மேடையில் எரியூட்டப்பட்டது. அதன் பின்னர் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு வந்த சிறுமியின் தாயார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனது கணவர் சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர் என்றும் கணவரின் காலில் சீல் வைத்து வீங்கி உள்ளதாகவும் அவரால் நடக்கக்கூட இயலாத நிலையில் நாங்கள் ஆணவ கொலை செய்தோம் என்று தவறாக குற்றம் சாட்டுகின்றனர். நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பம். நாளை கல்லூரிக்கு செல்லவிருந்த நிலையில், இறந்து விட்டதாக வேதனை தெரிவித்தார். எனது கணவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், உடல் நலம் இல்லாதவர் எப்படி தாக்குவார் என்றும் அவர் தெரிவித்தார்.














