தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், மூன்று யானைகள், குதிரைகள் முன்னே செல்ல சிறப்பாக நடைபெற்றது, தேரை இழுத்துச் செல்வதற்கு உதவியாக , தருமபுரம் கோயில் யானை தேரை பின்புறம் இருந்து யானை தள்ளி இயக்கியது பக்தர்களை பரவசத்தில் ஆக்கியது:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது. மடத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு கடந்த 28ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் இன்று காலை துவங்கியது. சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினர். அதனை அடுத்து தீபாராதனைக்குப் பின்னர் திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். மூன்று யானைகள், குதிரைகள் கழுதை, அலங்கரிக்கப்பட்ட ஆடு ஆகியவை முன்னே செல்ல, மங்கள வாத்தியங்கள் முழங்க தேரோட்டம் நடைபெற்றது. தருமபுர ஆதீனத்தின் நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. தேர் மேற்கு ரத வீதியில் திரும்பும் பொழுது, பக்தர்களுக்கு உதவியாக தருமபுரம் ஆலய யானையான ஞானாம்பிகை, பின்புறம் இருந்து தேரை முட்டி தள்ளி பக்தர்களுக்கு உதவியது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. நிகழ்ச்சியில் தருமபுர ஆதின 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக நாளை காலை, முந்தைய ஆதீனங்களின் ஐக்கிய கோயில்களான குருமூர்த்தங்களுக்கு நாற்காலி பல்லக்கில் செல்லும் நிகழ்ச்சியும் , நாளை மறுதினம் புகழ்பெற்ற பட்டணப் பிரவேசமும், முக்கிய நிகழ்ச்சியான சிவிகை பல்லக்கும் நடைபெற உள்ளது.















