ஆழித்தேரோட்டத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேலாக குவிந்த பக்தர்கள் கூட்டம். 1500 காவலர்களை பயன்படுத்தி கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
உலகின் மிகப்பிரசித்தி பெற்ற சைவ சமயத்தின் தலைமை பீடமான திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவில் ஆழித்தேரோட்டம் வெகு விமர்சையாக லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க உற்சாகமாக நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட தலைமை அமர்வு நீதிபதி, மாவட்ட கூடுதல் ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வடம் பிடித்து இழுத்து தேர்த்திருவிழாவை துவங்கி வைத்தனர்.
ஆரூரா தியாகேசா என்ற பக்தி முழக்கத்தோடு உற்சாகமாக கோஷம் எழுப்பி லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் திருவிழாவில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் தலைமையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து 1500 மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியிலும், போக்குவரத்து சீரமைப்பு பணியிலும் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல்துறை கூறியுள்ளது. ஆனால் நடைமுறையில், சென்ற ஆண்டு செய்த பாதுகாப்பு கூட தற்போது இல்லை என பொதுமக்கள் வேதனையுடன் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டு தேரை சுற்றி சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் எந்தவித அசம்பாவிதமும் இன்றி தேரோட்ட நிகழ்வு நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு காவல்துறையின் பாதுகாப்பு குளறுபடி காரணமாக பொதுமக்கள் கட்டுப்பாடு இன்றி தேரின் மிக அருகில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக தேரோட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 50க்கும் மேற்பட்ட மக்கள் கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. உடனடியாக தேரை நிறுத்த பொதுமக்கள் கூச்சலிட்ட போதும், தேர் நிறுத்தப்படாமல் வேகமாக முன்னேறி வந்தது. உடனடியாக அருகில் இருந்த இளைஞர்கள் சுதாரித்துக் கொண்டு கீழே விழுந்தவர்களை உடனடியாக காப்பாற்றியதால் உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்த பகுதியில் காவலர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல ஆழித்தேர் கீழ வீதியில் இருந்து தெற்கு வீதி முனையில் திரும்புவதற்காக தயார் நிலையில் இருந்த போது, பாதிக்கப்பட்ட நபரை அழைத்துக் கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று வடம் இருக்கும் பகுதியில், பொதுமக்களின் கூட்டத்திற்குள் புகுந்து சென்றது. அதிகப்படியான கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் தவித்த போது தன்னார்வம் மிக்க இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கூட்டத்தை ஒழுங்குபடித்தினர்.
குறிப்பாக தேரோட்டம் நடைபெறும் நான்கு வீதிகளுக்கு அருகே உள்ள பல்வேறு தெருக்களிலும் ஏராளமான வாகனங்கள் நகர முடியாமல் நின்றிருந்தன. இதனை இளைஞர்களே முன்நின்று போக்குவரத்தை சீர் செய்தனர். .
இதே போல ஆழி தேர் வேகமாக ஓடி வந்ததால் சாலையின் ஓரம் நின்றிருந்த பொதுமக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து காயம் ஏற்பட்டது. இதில் சிறுவனின் கையில் ரத்தம் வழிந்து ஓடியது. மேலும் ஆங்காங்கே போதை தலைக்கேறிய இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒருவர் வரை தாக்கி கொண்டனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக மாவட்ட ஆட்சியரால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பீ பீ என்ற பிளாஸ்டிக் ஊதுகுழல்கள் சர்வ சாதாரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊதி கொண்டு சென்றனர். இதனால் முதியவர்கள் கடும் அவதிப்பட்டனர்.
ஆழிதேரோட்டத்திற்கு வரும் பக்தர்களை எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் கடமையாகும். காவல்துறை தனது கடமையை தவறி மக்கள் மீது எந்தவித அக்கறையும் இன்றி அலட்சியப்போக்கோடு செயல்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது பொதுமக்களிடையே கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
வார விடுமுறை நாள் என்பதால் எதிர்பார்த்த ஒரு லட்சத்தை விட அதிகமான மக்கள் கூடியதால் மக்களின் பாதுகாப்பிற்காக அமர்த்தப்பட்ட 1500 காவலர்களை கட்டுப்படுத்த முடியாமல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் மக்களின் பாதுகாப்பில் கோட்டை விட்டார்.

















