16 கோடியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட திருவாரூர் பழைய பேருந்து நிலையம் சமூக விரோதிகளை கூடாரமாக மாறி வரும் அவலம் – முதல்வரின் சொந்த ஊரில், கலைஞர் பெயரில் திறக்கப்பட்ட பேருந்து நிலையம் பாழாய் போகும் அவலத்தை தடுத்து நிறுத்த கோரிக்கை.
திருவாரூர் நகரின் மையப்பகுதியில் இருந்த பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு ரூபாய் 16.30 கோடி செலவில் நவீன வசதியுடன் புனரமைக்கப்பட்டு, கடந்த அக்டோபர் மாதம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நகர்ப்புற பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு திறக்கப்பட்டது. இதில் 150கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் கடைகளின் நீள, அகலங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான வணிகர்கள் இங்கு கடைகளை ஏலம் எடுத்து நடத்துவதற்கு தயக்கம் காண்பிக்கின்றனர். இதனால் பெரும்பாலான கடைகள் பூட்டியே கிடைக்கின்றன. இதனை பயன்படுத்திக் கொண்ட சமூக விரோதிகள், சட்டவிரோதமான செயல்களுக்கு இந்த பழைய பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மது, கஞ்சா உள்ளிட்ட போதை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை உபயோகிப்பதற்கு இந்த புதிய கட்டிடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இது மட்டுமில்லாமல் பூட்டி கிடைக்கும் பழைய பேருந்து நிலையத்திற்கு உள்ளேயே சிறுநீர் கழித்து செல்கின்றனர். இதனால் புதிதாக கட்டப்பட்ட பழைய பேருந்து நிலையம் துர்நாற்றம் வீசி காணப்படுகிறது. ஆனால் திருவாரூர் மாவட்ட காவல்துறையோ, திருவாரூர் நகராட்சி நிர்வாகமோ இதை கண்டும் காணாமல் உள்ளது என வணிகர்கள் மற்றும் பேருந்து பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

















