மாநில அளவில் நடைபெற்று வரும் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் தேனி மாவட்ட ஹாக்கி வீரர்கள் இரவோடு இரவாக சொந்த ஊருக்குத் திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாநில சப் ஜூனியர் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஹாக்கி அசோசியேஷன் அணிகள் பங்கேற்று வருகின்றன. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தேனி மாவட்ட ஹாக்கி அசோசியேஷன் சார்பில் சுமார் 15-க்கும் மேற்பட்ட சப் ஜூனியர் மாணவர்கள் பயிற்சியாளர் கிஷோர் தலைமையில் நேற்று இரவு ராமநாதபுரத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். மாநில அளவிலான இந்த முக்கியமான போட்டிக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக மாணவர்களைத் தயார் செய்து வந்ததாகவும், இந்த வாய்ப்பு அவர்களின் எதிர்காலத்திற்குப் பெரும் முன்னேற்றமாக இருக்கும் என எதிர்பார்த்திருந்ததாகவும் பயிற்சியாளர் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ஆனால், போட்டி நடைபெறும் இடத்தை அடைந்த பின்னர், தேனி மாவட்ட ஹாக்கி கழகத்திலிருந்து மாநில போட்டிக்கான அனுமதி பதிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் போட்டியில் பங்கேற்க முடியாமல் தங்குமிடம் மற்றும் உணவு வசதி இல்லாமல் அவதியடைந்துள்ளனர். இறுதியில், வேறு வழியின்றி இரவோடு இரவாக தேனிக்குத் திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து பயிற்சியாளர் கிஷோர் பேட்டியில் கூறியதாவது: “கடந்த ஐந்து ஆண்டுகளாக மாணவர்களை மாநில போட்டிக்காக தயார்படுத்தி வந்தோம். இந்தப் போட்டியில் கலந்து கொண்டிருந்தால் எங்கள் மாணவர்களுக்கு தமிழக அணியில் இடம் பெற நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் தேனி மாவட்ட ஹாக்கி கழக தலைவர் சங்கிலி காளை எங்களுக்கு முறையான தகவல் வழங்காததால் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போதைய தலைவரை மாற்றி, விளையாட்டு வளர்ச்சியை முன்னிறுத்தும் புதிய தலைவரை நியமிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.
மேலும், ஹாக்கி வீரர் ஹோம்நாத் குமார் தனது வேதனையை வெளிப்படுத்தியபோது, “தமிழக அணிக்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை கூட எழுதாமல் போட்டிக்காக வந்தோம். ஆனால் அனுமதி பதிவு செய்யப்படவில்லை என்று கூறியதால் என்ன செய்வது என்று தெரியாமல் தங்கும் இடம், உணவு வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டோம்” எனக் கண்கலங்கினார்.
மாநில அளவிலான முக்கிய போட்டியில் கலந்து கொள்ள முடியாமல், கல்வியையும் தற்காலிகமாக ஒதுக்கி வைத்து வந்த மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியிருப்பது தேனி மாவட்ட விளையாட்டு வட்டாரங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, எதிர்காலத்தில் இத்தகைய நிர்வாக குறைபாடுகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்













