மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து இரண்டாவது நாளாக காலவரையற்ற தர்ணா போராட்டம். கௌரவ விரிவுரையாளர்களை பின்வாசல் வழியாக வந்தவர்கள் என்று பொய்யான தகவலை பரப்பும் உயர் கல்வித் துறை அதிகாரிகளை கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டி கண்டனம்:-
தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை காலவரையற்ற போராட்டம்:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 79 விரிவுரையாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ள 57800 ரூபாய் சம்பளம் வழங்கப்படாமல் குறைந்தபட்ச தொகுப்பூதியம் 25 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. 11 மாதம் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ள 57 ஆயிரத்து 800 ரூபாய் மாதம் ஊதியம் வழங்க வலியுறுத்தியும், இது தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியும், பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், மகப்பேறு விடுப்பு வழங்க வலியுறுத்தியும், வருங்கால வைப்பு நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் கௌரவ விரிவுரையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவது நாளாக இன்று நடைபெற்ற போராட்டத்தில் தகுதி அடிப்படை மற்றும் இன சுழற்சி அடிப்படையில் உயர்கல்வித்துறை தங்களை பணியமர்த்தியுள்ள நிலையில் நீதிமன்றத்தில் புறவாசல் வழியாக வந்தவர்கள் என்று தற்போது கூறும் உயர் கல்வித் துறையை கண்டிக்கும் விதமாக கௌரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்புத் துணி கட்டி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதேபோல்
குத்தாலம் அரசு கலைக்கல்லூரி, மணல்மேடு அரசு கலைக்கல்லூரி, புத்தூர் அரசு கலைக் கல்லூரி ஆகிய கலைக் கல்லூரிகளிலும் போராட்டம் நடைபெற்று வருவதாகவும்
தங்கள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றும் வரை காலவரையற்ற தொடர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என்றும் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு கல்லூரிகளில் வகுப்புகள் பாதிக்கப்பட்டது.

















