திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கோயிலுக்குச் சொந்தமான ‘கல்லத்தி’ மரத்தில், தர்கா நிர்வாகம் சார்பில் கொடியேற்ற அனுமதி வழங்கக் கூடாது என இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல் துறையிடம் வலியுறுத்தியுள்ளன. திருப்பரங்குன்றம் மலைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்டுள்ள அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான மலை உச்சியில் ‘கல்லத்தி’ என்ற ஸ்தல விருட்ச மரம் உள்ளது. இது மிகவும் தொன்மையானது. திருப்பரங்குன்றம் மலை மற்றும் கிரிவல வீதிகளில் உள்ள அனைத்து மரங்களும் கோயில் நிர்வாகத்திற்கே சொந்தமானவை என ஏற்கனவே நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. தற்போது தர்கா நிர்வாகம் அந்த மரத்தில் நிலா பிறை போட்ட கொடியினை ஏற்ற முயற்சி செய்து வருகிறது. தர்கா நிர்வாகம் கொடியேற்ற விரும்பினால், அதனை தர்கா வளாகத்திற்குள்ளோ அல்லது தர்காவின் முன்புறமோ மட்டுமே செய்து கொள்ள வேண்டும்.
கோயில் சொத்தான மரத்தில் கொடியேற்றுவது ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும். எனவே, மரத்தைச் சுற்றிலும் கோயில் நிர்வாகம் உடனடியாக வேலி அமைத்துப் பாதுகாக்க வேண்டும். இந்த மனுவில் அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம், ஆலய பாதுகாப்பு குழு நகர் தலைவர் முருகன், ஹிந்து ராஷ்டிர சபா கிருஷ்ணகுமார், மாவட்டத் தலைவர் முத்து சேர்வை, மற்றும் பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு மதுரை மேற்கு மாவட்ட இணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்த புதிய புகார் காவல்துறை வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

















