மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி ஆழ்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் இரண்டாவது நாளாக மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. தொடர்ந்து நீடிக்கும் தடை காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசுவதால், கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்ல நேற்று (டிசம்பர் 11) தடை விதிக்கப்பட்டது.
ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. மண்டபம் பகுதியில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை மீனவர்கள் கடலில் நங்கூரமிட்டுப் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர் இந்தத் தடை உத்தரவு இன்று இரண்டாவது நாளாகத் தொடர்வதால், மீன்பிடிப் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
மண்டபம் பகுதியில் நேற்று அதிகாலை முதல் சாரல் மழை இடைவிடாமல் பெய்தது. இதனால், மீன்களை உலர்த்தும் பணியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் மீன்பிடித் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில்:
“அண்மையில் ‘டிட்வா’ புயலால் கடலுக்குச் செல்ல ஒரு வாரத்திற்கும் மேல் தடை விதிக்கப்பட்டது. இதனால் மீன்பிடிப் பணி பெரிதும் பாதிக்கப்பட்டது. எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இந்நிலையில், தற்போது ஆழ்கடலில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் மீன்பிடிப் பணிக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டு, அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இயற்கையின் இடர்ப்பாடுகளால் கடலுக்குச் செல்ல முடியாமல் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நிலைமை சீராகி கடலுக்குச் செல்லும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்.” இவ்வாறு மீனவர்கள் தங்கள் வேதனையைத் தெரிவித்தனர்.

















