சென்னை :
நாமக்கல் கிட்னித் திருட்டு விவகாரத்தை கண்டித்து, “கிட்னிகள் ஜாக்கிரதை” என்ற வாசகத்தைக் கொண்ட பேட்ஜ்களை அணிந்து கொண்டு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வந்தனர்.
ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு கடந்த 14ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து பேரவையில் சூடான விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். இதனை சபாநாயகர் அப்பாவு, “ரத்த அழுத்தம் இருக்கா?” என நகைச்சுவையாகக் கேட்டிருந்தார்.
அதே சமயம், கேள்வி நேரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியபோது, “தவெக் தலைவர் நேரம் தவறி பிரசாரத்தில் ஈடுபட்டதே கரூர் விபத்துக்குக் காரணம்” எனக் குறிப்பிட்டார். இதற்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, “அரசு உரிய பாதுகாப்பு அளித்திருந்தால் இவ்விபத்து நடந்திருக்காது” எனக் கூறியதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது.
இதையடுத்து அதிமுகவினர் பேரவையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் இன்று, நாமக்கல் கிட்னித் திருட்டு விவகாரத்தை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் “கிட்னிகள் ஜாக்கிரதை” பேட்ஜ்களுடன் பேரவைக்கு வந்தனர். பின்னர், இதுகுறித்து கவன ஈர்ப்புத் தீர்மானத்தையும் கொண்டு வந்தனர்.
அதற்கு பதிலளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், “கிட்னித் திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சிதார் மருத்துவமனையின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தவறு யார் செய்திருந்தாலும் அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்,” என்று தெரிவித்தார்.
அதிமுக சார்பில் இந்த விவகாரத்தில் மேலும் கேள்விகள் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.