மயிலாடுதுறை நகராட்சி 1-வது வார்டில் காவேரி ஆற்றின் குறுக்கே நகராட்சியால் கட்டப்பட்ட பழமையான நடைபாலம் பழுதடைந்து இடிந்து விழுந்த நிலையில் பாலத்தை மீண்டும் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து நகர்மன்ற உறுப்பினர் வெளிநடப்பு
மயிலாடுதுறை நகராட்சி 1-வது வார்டில் 9-வது வார்டு திருமஞ்சன வீதியை இணைத்து காவிரி ஆற்றின் குறுக்கே பொதுமக்களின் வசதிக்காக 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நடைபாலத்தின் ஒரு பகுதி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. அபாயமான நிலையில் இருந்த நடைபாலத்தை ஆபத்தை உணராமல் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபாலம் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தில் புதிய நடைபாலம் கட்டித் தரக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பாலம் கட்டித் தரப்படவில்லை.
இன்று மயிலாடுதுறை நகராட்சியில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் நடைபாலத்தை கட்டாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 1-வது வார்டு உறுப்பினர் ஜெயந்தி ரமேஷ் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு வரை மனு அளித்தும் நடைபாலம் கட்டப்படாததால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும், அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்தும் நடைபாலத்தை கட்டாமல் நிதியை திருப்பி அனுப்பி விட்டதாகவும் குற்றம் சாட்டி உடனடியாக நடைபாலம் கட்டி பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.














