மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மோட்டார் வாகன போக்குவரத்து துறை சார்பில் தலைகவசம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் காவல்துறையினர், தனியார் மோட்டார் வாகன நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் பங்கேற்று தலைகவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர். தொடர்ந்து பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மயிலாடுதுறை வட்டார மோட்டார் வாகன அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கதிர்வேல் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராம்குமார் விசுவநாதன், அழகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
