விண்வெளிக்கு அல்வா, பிரியாணியை கொண்டுசெல்லும் இந்திய வீரர் சுக்லா.. பயணம் ஒருநாள் தள்ளிவைப்பு!
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் ஆக்சியம் 4 விண்வெளி பயணத்திட்டம், ஜூன் 10-ஆம் தேதியில் இருந்து ஜூன் 11- ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1984ஆம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த ராகேஷ் சர்மா சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற நிலையில், கிட்டத்தட்ட 41 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெறவிருக்கிறார் சுபன்ஷு சுக்லா. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு பயணிக்கும் ஆக்சியம்-4 திட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லா, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன் என்ற 4 விண்வெளி வீரர்கள் பயணிக்கின்றனர். மேலும் நாசாவின் விண்வெளி வீரரான விட்சன், மிஷன் கமாண்டராகப் பணியாற்றவிருக்கிறார்.

Axiom4 மூலம் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் இவர்கள், 14 நாட்கள் அங்கு தங்கி 60 அறிவியல் பரிசோதனைகளை செய்யவிருக்கின்றனர்.
இந்நிலையில் ஜுன் 10-ம் தேதியான இன்று இவர்கள் விண்வெளி மையம் புறப்படுவார்கள் என கூறப்பட்ட நிலையில், அவர்களின் பயணம் ஒருநாள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சுபன்ஷு சுக்லா கேப்டனாக பயணிக்கும் ஆக்சியம்-4 விண்வெளித் திட்டம் ஒருநாள் தள்ளிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலில், மோசமான வானிலை காரணமாக ஆக்சியம் 4 விண்வெளி பயணத்திட்டம், ஜூன் 10-ஆம் தேதியில் இருந்து ஜூன் 11- ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பருப்பு அல்வா, கேரட் அல்வா, இட்லி, பிரியாணி போன்ற உணவுகளை தன்னுடன் கொண்டு செல்லவிருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. விண்வெளியில் தங்கியிருக்கும்போது வீட்டு உணவை சுவைப்பது போன்ற அனுபவத்தைப் பெறுவதற்காக இஸ்ரோ மற்றும் DRDO இணைந்து விண்வெளி சூழலுக்கு ஏற்றார்போல் பிரத்யேகமாகத் தயாரித்து அனுப்பி வைக்கவிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.