சென்னையில் மயிலாடுதுறை மாவட்ட திமுகவினரை மாற்றுக்கட்சியினர் என்று கூறி முதல்வர் முன்னிலையில் மீண்டும் கட்சியில் இணைத்ததாக திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மீது குற்றசாட்டு. எங்களத்தான் ஏமாத்தினிங்க இப்ப தலைவரையே ஏமாத்துறிங்களா என திமுக நிர்வாகி முகநூலில் போட்ட பதிவால் பரபரப்பு.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாற்று கட்சியினர் 2,800 பேர் திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ ஏற்பாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயிரத்துக்கு குறைவானவர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதிலும் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஏற்கனவே திமுகவில் பொறுப்புகளிலும், அடிப்படை உறுப்பினர்களாகவும் இருப்பதாக கட்சி நிர்வாகிகளே குற்றம் சாட்டுகின்றனர். இதனை கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். மயிலாடுதுறை திமுக நகர துணை செயலாளர் பொறுப்பில் உள்ள ஆர்.கே.சங்கர் என்பவர் தலைவரையே ஏமாத்துகிறீர்களே என காட்டமாக பதிவிட்டுள்ளார். அதற்கு, அப்பதிவில் பதிலளித்துள்ள அவரது கட்சி தொண்டர் ஒருவர், புதிதாக கட்சியில் இணையும் மாற்றுக் கட்சியினரிடம், அவர்கள் ஏற்கனவே இருந்த கட்சியின் அடையாள அட்டையை திமுக தலைமை பெற்றுக் கொண்டு கட்சியில் சேர்க்க வேண்டும் என்று தீர்வையும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் திமுகவினர் மட்டுமின்றி, அதிமுக உள்ளிட்ட எதிர் தரப்பினர் மத்தியிலும் பேசுபொருளாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.