நாம் என்னதான் திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வந்து கொடுங்கள் என்று சொன்னாலும், இங்கு இருக்கின்ற சிலர் முந்தைய ஆட்சியாளர்களின் பிடியில் இருப்பதால் திட்டங்களும், பொருட்களும் சென்றடைவதில் தாமதம் ஆகிறது என தரங்கம்பாடியில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்ற மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சரும் உணவுத்துறை அமைச்சருமான வெங்கட்ரமணன் பேச்சு.
மயிலாடுதுறை மாவட்ட மீனவத் தலைமை கிராமம் தரங்கம்பாடியில் உள்ள ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. ஆறாம் நாள் திருவிழாவான இன்று மயிலாடுதுறை பொறுப்பு உணவுத்துறை அமைச்சருமான வெங்கட்ரமணன் வருகை தந்து திருவிழாவில் பங்கேற்றார்.
அப்போது கோவிலுக்கு வந்த அவருக்கு மீனவர் கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற அவர் தனது பேரிலும் தமிழக முதல்வர் விஜய் பெயரிலும் சிறப்பு அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். அப்போது பொதுமக்களை சந்தித்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் சார்பில் தரங்கம்பாடியில் சீகன்பால்கிற்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தரங்கம்பாடியில் கூட்டுறவு வங்கி அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், மீனவர்களின் கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
தொடர்ந்து பொதுமக்களிடம் அவர் பேசுகையில்,
“தற்போது ஒரு பிரச்சனை உள்ளது என்றால் அதற்கு காரணம் 50, 70 ஆண்டுகால மற்ற கட்சிகள் எல்லாம் ஓட்டுக்காக, பதவிக்காக, பணத்துக்காக, பொருளுக்காக உருவாக்கப்பட்டது தான் இவ்வளவு பிரச்சனைகள்.
நான் முதல்வரை சந்திக்கும்போதெல்லாம், எப்பெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து நிவர்த்தி செய்யுங்கள் என முதல்வர் கூறுவார். ஒவ்வொரு மாதமும் இந்த மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வரேன். இங்கு வரும்போதெல்லாம் என்னென்ன கோரிக்கைகள் இருக்கிறது என மக்கள் மூலமாக கேட்டுட்டு, இங்கு எவ்வளவுக்கு எவ்வளவு சீர்படுத்த முடியுமோ அதை சரி செய்வேன்.
சீகன்பால்குவிற்கு தரங்கம்பாடியிலேயே மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தரங்கம்பாடியில் கூட்டுறவு வங்கி அமைக்க கோரிக்கை வைத்துள்ளீர்கள். இங்கு வருவதற்கு முன் இந்த கோரிக்கை எனக்குத் தெரிந்திருந்தால், இங்கு வரும்போது வங்கியை அமைத்துவிட்டு, வங்கியை திறந்து வைக்க வந்திருப்பேன்.
நான் கடந்த முறை வரும்போது நல்ல அரிசி தரங்கம்பாடியில் வழங்குவதில்லை என பெண்கள் கோரிக்கை வைத்தனர். நாம் என்னதான் அங்கிருந்து திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வந்து கொடுங்கள் என்று சொன்னாலும், இங்கு இருக்கிற சில முந்தைய ஆட்சியாளர்களின் பிடியில் இருப்பதால் சில நேரங்கள் திட்டங்களும், நாம் எதிர்பார்க்கிற பொருட்களும் சென்றடைவதில் தாமதம் ஆகிறது.
நிச்சயமாக அடுத்த மாசம் வரும்போது இந்தப் பகுதிக்கு, இந்த தரங்கம்பாடியில் இருக்கிற இந்த ரேஷன் கடைகளிலும் தரமான பொருள் கண்டிப்பாக கிடைக்கும் உத்தரவாதம் தந்து, நானே வந்து பார்ப்பேன்.
சட்டமன்றத்தில் எதிரணியில் உள்ள உறுப்பினர்கள் எல்லாம் எங்கள் தொகுதியில் 50 ஆண்டுகளாக இந்த பிரச்சனைகள் உள்ளது, அதை சரி செய்து கொடுங்கள் என கேட்கிறார்கள். அவங்களுக்கே தெரிகிறது, அவர்கள் ஆட்சியில் சரி செய்ய மாட்டார்கள் என. அதனால்தான் நம்ம வெற்றித் தலைவரையும், நம்ம மாண்புமிகு முதல்வரிடம் கேட்டா கண்டிப்பா செய்து கொடுப்பார், இவர் மக்களுக்கான தலைவர், மக்களுக்கான அமைச்சர், மக்களுக்கான மக்களுக்குப் பணி செய்யும் கவர்மெண்ட் அப்படின்னு அவங்களுக்கும் நம்பிக்கை இருப்பதால்தான் அவர்கள் கேட்கிறாங்க.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லாம் கோரிக்கை வைக்கும் போது, எங்கள் தொகுதியில் அதை செய்து கொடுங்கள், அவ்வளவு பிரச்சினை உள்ளது என கேட்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு தெரியும், அவர்கள் ஆட்சியாளர்கள் எல்லாம் செய்ய மாட்டார்கள். கட்டிங், கமிஷன், கரப்ஷன்லயே போய்விடும். வெறும் வாயில்தான் வடை சுடுவாங்க, வேலையில் காமிக்க மாட்டார்கள் என அவர்கள் கட்சிகளே சட்டமன்றத்தில் பதிவு செய்றாங்க.
நேற்று கூட இந்த தரங்கம்பாடி பகுதி சட்டமன்ற உறுப்பினர் கேட்கிறார், நீங்கள் தான் எங்கள் மாவட்ட பொறுப்பு அமைச்சர், அதை செய்து கொடுங்கள் என கேட்கிறார். இதற்கு முன் அவர்கள் ஆட்சி காலத்தில் பொறுப்பு அமைச்சர்களாக இருந்தவர்களை இப்படி கேட்டிருப்பார்களா? ஆனால் நமது ஆட்சி காலத்தில் எந்த சட்டமன்ற உறுப்பினர் எந்த கோரிக்கை வைத்தாலும் அதை ஆய்வு செய்து துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.”
மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் கோபிநாத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.















